ஜெயலலிதாவுடன் வருமான வரித்துறை சமரசமாகியும் முடியாத வழக்கு! ஜன.8ல் மீண்டும் விசாரணை
சென்னை: வருமான வரித்துறையினர், சமரசத்துக்கு சம்மதம் தெரிவித்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ் வழக்கில் இருந்து வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் சென்னை எழும்பூர் 1வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் 4 வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் கடந்த 1996ம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடந்துவரும் இந்த வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சமரச தீர்வு மனு ஒன்றை வருமானவரித்துறையிடம், ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும் தாக்கல் செய்தனர். கடந்த மாதம் 26ம் தேதி ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோரின் சமரச தீர்வு மனுக்கள் மீது வருமானவரித்துறையின் சமரசதீர்வு கமிட்டி விசாரணை நடத்தியது.
விசாரணையில், சமரச மனுக்களை, வருமானவரித்துறையின் கமிட்டி ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள 4 வழக்குகளிலும் சேர்த்து ரூ.1.99 கோடி செலுத்தவும், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோருக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது. கடந்த மாதம் 27ம் தேதி இந்த தொகை செலுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், வருமானவரித்துறை தொடர்ந்துள்ள இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று, சென்னை எழும்பூர் 1வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா தரப்பு வக்கீல்கள் அசோகன், கருப்பையா, பன்னீர்செல்வம், வைரமூர்த்தி, திவாகர் ஆகியோர் ஆ ஜரானார்கள். வருமானவரித்துறை சார்பில் சீனியர் வக்கீல் ராமசாமி ஆஜரானார்.
நேற்று இந்த வழக்கு முடிவுக்கு வந்து, ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வரவில்லை. ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் சார்பில் தனித்தனி மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை பொறுத்தமட்டில், சமரசதீர்வு மனுக்களில், வருமானவரித்துறையின் இறுதி ஆணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் நடப்பதால், சமரச தீர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும், உரிய தகவல் தெரிவிக்கவேண்டிய நிலை இருப்பதாகவும், அதனால் வழக்கை தள்ளி வைப்பதில் தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்று வருமானவரித்துறை வக்கீல் சொன்னார்.
இதனால் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். அன்றையதினம் இந்த வழக்கு முடிவுக்குவர வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications