வருமான வரித்துறை அலுவலகத்தில் நடக்கவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு திடீர் ரத்து?
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறவிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.144 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஏராளமான பணம், நகைகள் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நேற்று ராமமோகன ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனிடையே தலைமை செயலகத்திற்குள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் சோதனையின் போது துணை ராணுவ படையினரை ஈடுபடுத்தியது குறித்தும் வருமான வரித்துறையினர் மாநில அரசின் அனுமதியை பெறாமலே தலைமை செயலகத்திற்கு நுழைந்து சோதனை நடத்தியது தவறு என பலர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காரணமேதும் கூறப்படாமல் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.