ஆர்.கே. நகரில் விநியோகிக்க பெரும் பணம் பதுக்கல் - எம்எல்ஏ ஹாஸ்டலிலும் அதிரடி ரெய்டு!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விநியோகிக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, இடங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. எம்எல்ஏ விடுதியில் உள்ள அறைகளிலும் ஐடி சோதனை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட சென்னையில் 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட 30 இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரி ஏய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடு, கல்லூரி, கல்குவாரி ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகார் தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எம்எல்ஏக்கள் விடுதியில் ரெய்டு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்எல்ஏ விடுதியில் உள்ள 5 அறைகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயபாஸ்கருக்கு சொந்தமான அறையில் பணம் படுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுகிறது.

பணம் பட்டுவாடா
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் இந்த சோதனை நடைபெறுகிறது. இங்கிருந்துதான் பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்தே சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவணங்கள் சிக்கின
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆர்.கே நகர் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

30 இடங்களில் சோதனை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரெய்டு நடந்துள்ளது. கட்டு கட்டாக 2000 ரூபாய் பணமும், டோக்கன்களும் சிக்கியுள்ளன. தொடர்ந்து 30 இடங்களில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications