பழைய 500 ரூபாய் மாற்றுவதிலும் முறைகேடு.. சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 8 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதில் முறைகேடு நடந்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து, சென்னையில் 8 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தியாவில் இதுவரை உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி திடுதிப்பென அறிவித்தது. இதனால் சாதாரண பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், லட்சாதிபதிகளுக்கோ கோடிஸ்வரர்களுக்கோ எந்த வித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. மேலும், பாதுகாப்பாக பணத்தை மாற்றும் வித்தையையும் கற்று வைத்துள்ளதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைவுதான்.

என்றாலும், வெள்ளிக்கிழமை பழைய 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றுவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால் சென்னையில் மொத்தம் 8 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் ரொக்கத்திற்கு பதிலாக தங்கத்தை மாற்றிக் கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால், பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதே போன்று ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடும் நபர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் போது
நவம்பர் 8ந் தேதி நள்ளிரவு முதல் சி.சி.டி.வி. பதிவுகளை நகைக்கடைகள் ஒப்படைக்க வேண்டும் எனவும் வருமான வரித்துறையினர் கேட்டுள்ளனர்.சில ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி, மும்பை மாநகரங்களை அடுத்து தற்போது சென்னையிலும் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications