மைசூரில் இருந்து மை வந்த பின்பே விரலில் மை வைப்போம்- வங்கி அதிகாரிகள் தகவல்
வங்கியில் ரூ. 4500 பணம் மாற்றுபவர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை மைசூரில் இருந்து வந்த பின்னரே அமல்படுத்தப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பணத்தை மாற்றுபவர்கள் கைகளில் மட்டுமே மை வைக்கப்படும் என்றும் பணத்தை டெபாசிட் செய்பவர்களின் விரல்களில் மை வைக்கப்பட மாட்டாது என்று இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு பணத்தை பிறரிடம் கொடுத்து மாற்றி வருவதாக எழுந்த புகாரை அடுத்து பணத்தை மாற்ற வருபவர்களின் கைகளில் அழியாத மை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மை வைக்கும் முறை இன்றே அமலுக்கு வரும் என்றும் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், கூலிக்காக அப்பாவிகளை வங்கி வாசலில் நிற்க வைத்து அவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி பணத்தை மாற்றி வருவதாகவும், ஒருவரே தொடர்ந்து பலமுறை பணத்தை மாற்றி வருவதாகவும் சக்தி காந்த தாஸ் கூறினார். இந்த அறிவிப்பு குறித்து சென்னை மயிலாப்பூரில் இந்தியன் வங்கி அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அழியாத மை மைசூரில் மட்டுமே உள்ளது. மைசூரில் மை தயாரிக்கும் இடத்தில் பேசியிருப்பதாகவும், மைசூரில் இருந்து மை வந்த பின்னர், எந்த விரலில் வைப்பது என்று அறிவித்த பின்னரே நாளை முதல் மை வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெளிவான அறிவுறுத்தல்கள் வந்த பின்னரே மை வைக்கப்படும் என்றும், கறுப்பு பணத்தை ஒழிப்பது ஒரு போன்றது. இந்த போரில் நாங்களும் பங்கேற்றுள்ளோம் என்றும் இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமண செலவிற்காக பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வங்கிகளுக்கு திருமண பத்திரிக்கையை கொண்டு வந்து தேவையான பணத்தை எடுத்துச் செல்லலாம் என்றும், பணம் கொடுப்பவர்களின் அக்கவுண்டிற்கு பண பரிமாற்றம் செய்யலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கைகளில் பணம் இருப்பவர்கள் வங்கி கணக்கில் போட்டு அதை எடுக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இன்று பணம் மாற்றியவர்களின் கைகளில் அழியாத மை வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அழியாத மை சிறப்புகள்
ஒட்டுப்போடும் போது கை விரலில் வைக்கப்படும் மையை, கர்நாடக மாநில அரசு நிறுவனமான, மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரிக்கிறது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களுக்கும், இந்த நிறுவனம் அழியாத மையை வழங்குகிறது.
இந்நிறுவனம், 1937ல், அப்போதைய மைசூர் மகாராஜாவாக இருந்த, நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் துவக்கப்பட்டது. கடந்த, 1962ல் இருந்து, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அழியாத மை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த மையில், சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனம் உள்ளது. இதை நீக்குவது எளிதல்ல. எனவேதான் கறுப்பு பணத்தை ஏழைகளிடம் கொடுத்து மாற்றுவதாக அறிந்த மத்திய அரசு பணத்தை ஒருவரே திரும்ப திரும்ப மாற்றுவதை தடுக்க விரலில் அழியாத மை வைக்க முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications