மதம், மது, ஜாதிய வெறியை வேரறுப்போம்: வேல்முருகன் சுதந்திர தின வாழ்த்து
சென்னை: நாடு விடுதலை பெற்று மக்களுக்கான ஜனநாயகம் உதயமான நாள் ஆகஸ்ட் 15. இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடு விடுதலை பெற்று மக்களுக்கான ஜனநாயகம் உதயமான நாள் ஆகஸ்ட் 15. இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசம் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்களால் வேறுபட்டாலும் நாம் இந்தியர் என்கிற ஒற்றுமை உணர்வே நமது தேசத்தை வல்லரசாக்கும்.

இந்திய விடுதலைப் போரில் புரட்சியாளர்களையும், தியாகப் பெருமக்களையும் ஈந்து தாரை வார்த்துக் கொண்ட ஈக மண் நமது தமிழகம். இந்திய துணைக்கண்டத்திலேயே ஆங்கிலேய வல்லாதிக்கத்தை வேரறுக்க முதல் ஆயுதமேந்திய புரட்சி நிகழ்ந்த மண் தமிழக மண்.
ஆங்கிலேயரின் படைகளை தகர்க்க வெடிமருந்து கிடங்கில் நெருப்போடு குதித்த உலகின் முதல் தற்கொடைதாரி வீரத்தாய் குயிலி பிறந்த மண் தமிழகம். ஆனால் நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் தமிழகம் தமது வாழ்வுரிமைகளுக்காக அன்றாடம் இந்தியப் பேரரசிடம் போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் அத்தனை உரிமை பிரச்சனைகளும் அப்படியே தீர்க்கப்படாமல் இருக்கின்றன; ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மது என்கிற புதிய அடிமை விலங்கு சமூகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
சமூகத்தை மாய்க்கும் மதுவை விட்டொழிப்போம்;
மதுவைவிட மா கொடிய ஜாதிய வெறியை வேரறுப்போம்;
மது, ஜாதிய வெறியைவிட பயங்கரமான மதவெறியை மாய்ப்போம்;
மனித நேயத்தை காப்போம் என்று இந்த 69வது சுதந்திர நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications