நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு- அம்பரப்பர் மலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பொதுமக்கள்!
மதுரை: நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில் உள்ள அம்பரப்பர் கோயிலில் 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது நியூட்ரினோ ஆய்வகம் குறித்து தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையிலான பதிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கவில்லை என்றனர் பொதுமக்கள்.

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் மத்திய அரசு ரூ.1,560 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இந்த அம்பரப்பர் மலையடிவாரத்தில் பொட்டிப்புரம், சின்ன பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், திம்மிநாயக்கன்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் வழிபடும் அம்பரப்பர் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை, மாசி, பங்குனி ஆகிய 3 மாதங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அப்போது, அம்பரப்பர் மலைப் பகுதியில் உள்ள தீபஸ்தம்பத்துக்கும் தீபமேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இதை வரவேற்று இந்தப் பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை கோயிலில் வழிபாடு நடத்த சென்றனர்.
பின்னர் மலைப் பகுதியில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபமேற்ற சென்றபோது போலீசார் அனுமதி மறுக்கவே கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து நேற்று பொங்கல் வைக்க போலீஸார் அனுமதியளித்தனர். அதன்பேரில் அம்பரப்பர் கோயிலில் 5 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாரம்பரிய கலை நிகழ்ச்சியான தேவராட்டம் நடைபெற்றது. பின்னர் தீபஸ்தம்பத்தில் பட்டுத் துணி அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளைக் கொடி காட்டிய பின்னர் பொங்கல் வழங்கி வழிபாட்டை முடித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள், நியூட்ரினோ ஆய்வகம் குறித்து தங்களுக்கு தெளிவான பதிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications