நியூட்ரினோவுக்கு போடி மலைப் பகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? திட்ட இயக்குநர் இந்துமதி விளக்கம்
திண்டுக்கல்: நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு போடி மலைப்பகுதியை தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து அத் திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான இந்துமதி விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நியூட்ரினோ தொடர்பான அறிவியல் கருத்தரங்கம் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் நடந்தது. இந்த கருத்தரங்கில் சென்னை கணிதவியல் மையம் மற்றும் நியூட்ரினோ திட்ட இயக்குநரான விஞ்ஞானி இந்துமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

நியூட்ரினோ தொடர்பான ஆய்வை ஜப்பான், சீனா, பிரான்ஸ், கனடா போன்ற 12 நாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. ஒவ்வொரு நாடும், நியூட்ரினோ குறித்து ஒவ்வொரு விதமான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலும் நியூட்ரினோ ஆய்வு பணி தொடங்கப்பட இருக்கிறது. நியூட்ரினோவின் நிறை பற்றிய ஆய்வை நாம் மேற்கொள்ள இருக்கிறோம். சூரியன் உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகி விட்டது.
சூரிய வெளிச்சம் எங்கே இருந்து உருவாகிறது? எத்தனை ஆண்டுகள் வெளிச்சம் கிடைக்கும் என்பன போன்ற ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 450 கோடி ஆண்டுகள் சூரியன் இருக்கும் என்று கருதப்படுகிறது. நியூட்ரினோவின் நிறையை ஆய்வு செய்வதன் மூலம், இதுபோன்ற பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிந்து கொள்ளலாம்.
ஏன் பொட்டிபுரம் தேர்வு?
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மலைப்பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அந்த மலைகள் தூள் பாறைகளை கொண்டதாக இருந்தது. தமிழகத்தில், தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள மலைப்பகுதி நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு ஏற்ற இடமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த மலையில் உள்ள பாறைகள் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. சுரங்கபாதை மற்றும் குகை அமைப்பதற்கு ஏற்றதாகும். பாறையை குடையும்போது 95 சதவீதம் தூளாகி போவதற்கு வாய்ப்பு இல்லை. ஆய்வு மையம் அமைக்க மலையை உடைக்கவோ, மரங்களை வெட்டவோ மாட்டோம். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த மாட்டோம்.
நியூட்ரினோ ஆய்வு மையம் ரூ.1,500 கோடியில் அமைக்கப்பட உள்ளது. மலையின் பக்கவாட்டு பகுதியை சுற்றிலும் பாறையை குடைந்து, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கபாதை அமைக்கப்படுகிறது. சுரங்கபாதை 2 வழிகளை கொண்டதாக இருக்கும். மலையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அடிப்பகுதியில் பூமிக்குள் குகை உருவாக்கப்படும். இந்த பணிகளுக்காக ரூ.470 கோடி செலவிடப்படுகிறது.
மலைக்குள் அமைக்கப்பட்ட குகைக்குள் தலா 17 ஆயிரம் டன் எடை கொண்ட இரும்பினாலான 3 கருவிகள் நிறுவப்பட உள்ளன. அதனுள் நியூட்ரினோ சேகரித்து வைத்து ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன் அருகே சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.
அதிர்வுகள் எதுவும் இல்லாத வகையில் சுரங்கபாதை, குகை அமைக்கும் பணிக்கு அதிக சத்தம் இல்லாத வெடிகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படும். ஆய்வு மையம் அமைக்கும் பட்சத்தில், தேவாரம் பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் எந்த வகையிலும் பாதிப்பு அடையாது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு விஞ்ஞானி இந்துமதி கூறினார்.












Click it and Unblock the Notifications