விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் இளங்கோ மாற்றம்
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியன் தற்கொலை வழக்கை விசாரித்த மோகனூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல்: விஜயபாஸ்கர் நண்பர் சுப்ரமணியனின் தற்கொலை குறித்து மோகனூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை நடத்தி வந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்பி செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல்லை சேர்ந்த கான்ட்ராக்டர் சுப்ரமணியன், அமைச்சர் விஜயபாஸ்கர், உள்பட பல அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார்.
ஏப்ரல் 7ஆம் தேதி சுப்ரமணியம் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி வந்தார் சுப்ரமணியன். இந்த நிலையில் கடந்த 8ம்தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இன்ஸ்பெக்டர் இளங்கோ
இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். சுப்பிரமணியன் வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை எனில் வருமானவரித்துறை சோதனைக்கு பிறகு யாராவது அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் மனைவி, மகனிடம் விசாரித்தார் இளங்கோ.

நெருக்கடி என்ன?
வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடியால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

தற்கொலை கடிதம்
இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் பக்கம், பக்கமாக கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. அந்த கடிதம் யார்- யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது? அது தற்போது எங்கே உள்ளது? அதில் உள்ள விவரங்கள் என்ன? என்பது தொடர்பாக போலீசார் காண்டிராக்டர் சுப்பிரமணியனின் மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்தினர் இளங்கோ.

செல்போன் அழைப்புகள்
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுப்பிரமணியனுடன் யார்? யார்? செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள், அவர்களில் யார் அதிகமுறை பேசி உள்ளார்கள்? என்பதையும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை எடுத்து போலீசார் விசாரித்தார் இளங்கோ.

கடிதம் சிக்கியது?
சுப்ரமணியம் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தை தனது உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தபாலில் ஒரு பார்சல் சுப்ரமணியம் வீட்டுக்கு வந்துள்ளது. இதையறிந்த இன்ஸ்பெக்டர் இளங்கோ, போலீசாரை அனுப்பி, அந்த பார்சலை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. கடிதத்தில் உள்ள விபரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

விசாரணை அதிகாரி மாற்றம்
தற்கொலை வழக்கில் தீவிரமாக விசாரித்து வந்தார் இளங்கோ, இந்த நிலையில்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் விசாரணை அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) செந்தில், இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவிட்டு உள்ளார்.

ஆவணங்கள் ஒப்படைப்பு
மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் செந்திலிடம் மாற்றம் செய்யப்பட உள்ளது. கூடுதல் எஸ்பி செந்தில் இன்று முதல் விசாரணையை தொடங்குவார் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலைக்கடிதம் சிக்கியுள்ள நிலையில் திடீரென இன்ஸ்பெக்டர் இளங்கோவை மாற்றியது ஏன்? அரசியல் ரீதியாக நெருக்கடி தரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications