உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: ஜெ., விஜயகாந்த், வைகோ வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகளி்ன் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவு கூறும் வகையில் டிசம்பர்.3 ம்தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்றிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு வழங்கும் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி எல்லா நலன்களையும் பெற்று, சம உரிமையுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
இதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
உடல் உறுப்புகளில் குறைபாடுகள் கொண்டு சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் வாழ்ந்து வருகின்ற மாற்றுத் திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் நம்மில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்த காலந்தொட்டு மாற்றுத் திறனாளிகள் மீது தனி அக்கறையும், கவனமும் செலுத்தி வந்தேன். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், தையல் இயந்திரங்களும், காது கேளாதோருக்கு, காது கேட்கும் கருவிகளும், நடப்பதற்கு உரிய ஊன்று கோல்களும், செயற்கை மாற்று உறுப்புகளும், கண் பார்வையற்றோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் ஆகியோருக்கு தேவையான உபகரணங்களும் வழங்கி வந்துள்ளேன். இந்த இனிய நாளில் அவர்களின் துன்பங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
வைகோ வாழ்த்து
மாற்றுத் திறனாளிகள் வாழ்வில், அலட்சியமும், அலைக்கழிப்பும், அவமானமும், ஏமாற்றமும் இல்லாத 2014 ஆம் ஆண்டு மாற்றம் உருவாகி, மகிழ்ச்சியுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.
தமிழ்நாட்டில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க கையறு நிலையில் நீதி கேட்டுப் போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது போடப்பட்ட வழக்குகளை, மனிதாபிமான அடிப்படையில் திரும்ப பெற தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
நிலவிலும் வான் மண்டலத்திலும் சாகசங்கள் புரியும் நாம், மாற்றுத் திறனாளிகளை மனித நேயத்துடன் கையாள்வதில் 25 ஆண்டுகள் பின்தங்கி உள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
கடந்த இரண்டரை ஆண்டுகால அண்ணா திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரியம் இதுவரை புதுப்பிக்கப்படாமல், ஒருங்கிணைப்புக்குழு செயல்படாமல் இருக்கின்றது. இந்த ஆட்சி, மாற்றுத் திறனாளிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது என்பதற்கு சாட்சி, டிசம்பர் 3 "உலக மாற்றுத் திறனாளிகள்" தினத்தை ஏற்காடு இடைத்தேர்தலுக்காக டிசம்பர் 5 க்கு மாற்றி வைத்து இருக்கின்றது. அரசின் மெத்தனப்போக்கைக் காட்டுகிறது.
துயரச் சிலுவைகளைத் தூக்கிச் சுமக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னும் இளைப்பாறுதல் கிடைக்கவில்லை. அவர்களும், சக மனிதர்களைப் போன்று அனைத்து உரிமைகளும் பெறும் வரை மறுமலர்ச்சி தி.மு.க.தோள் கொடுத்து குரல் கொடுக்கும் என வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications