பெண்ணின் காதில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு
சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்ணின் காதில் அறைந்து தாக்கிய போலீஸ் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஈரோடு: டாஸ்மாக் போராட்டத்தில் பெண்ணின் காதில் அறைந்து செவிடாக்கி சர்ச்சைக்குள்ளான ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சாமாளாபுரத்தில் கடந்த ஏப்ரல்11ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராடினர். அப்போது, அப்போராட்டத்தை தடுத்து நிறுத்த எண்ணிய போலீஸார் போராடிய பெண்கள் மீதும், பொதுமக்களின் மீதும் தடியடி தாக்குதல் நிகழ்த்தினர்.
இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணில் கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதனால், அப்பெண்ணுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈஸ்வரியைத்தாக்கி, செவித்திறனை குறைத்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி, மனிதநேயர்கள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.
பெண்ணின் காதில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு https://t.co/fowXaHS53r pic.twitter.com/mkWjQlKE3c
— Oneindia Tamil (@thatsTamil) June 15, 2017
இந்நிலையில் தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை, பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்தது. இந்தப் பட்டியலில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெயரும் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மதுவிலக்கு கூடுதல் எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பாண்டியராஜனின் பதவி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெண்களை தாக்கியவருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.