தமிழகத்தில் ஓய்ந்ததா மோடி எதிர்ப்பு அலை? இல்லை, இல்லை.. இது மேட்டரே வேற
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில், திமுகவுக்கு, அதிமுக கடுமையான போட்டியை கொடுத்து வருவதை பார்த்தால், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை ஓய்ந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
லோக்சபா பொதுத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக கூட்டணி ஆதரவு வலை வீசினாலும், தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்கள் சிலவற்றில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்தது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் தேனி தொகுதியை தவிர்த்து பிற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மோடி எதிர்ப்பு அலை தான் இதற்கு முக்கிய காரணம் என்று அப்போது அரசியல் விமர்சகர்களால் காரணம் முன்வைக்கப்பட்டது.
அபார ஓட்டுக்கள்
சில தொகுதிகளில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எல்லாம் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். எனவே வேலூர் லோக்சபா தொகுதியிலும் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றுவிடும், பிற தொகுதிகளைப் போலவே இங்கும் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று தான் திமுக தலைமை மட்டுமின்றி அரசியல் விமர்சகர்களும் கருதினர்.
கடும் போட்டி
ஆனால் வேலூர் லோக்சபா தொகுதியில் காலை முதலே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு, கடுமையான போட்டியை கொடுத்துவருகிறார் அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம். இதை திமுக தலைமையே எதிர்பார்க்கவில்லை. வெறும் இரண்டு மாதங்களுக்குள் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை ஓய்ந்து விட்டதா என்ற கருத்துக்கள் பரவலாக எழத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். அவர்கள் கூறியதை பாருங்கள்.
மோடி ஆட்சி
லோக் சபா பொதுத் தேர்தலை பொறுத்த அளவில் யார் மத்தியில் ஆட்சியை அமைக்க போகிறார்கள் என்பது தெரியாத காலகட்டம். எனவே மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். ஆனால், இப்போது மத்தியில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மோடி அரசு ஆட்சி அமைத்து விட்டது. எனவே இப்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது தான் தொகுதிக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும் என்ற கருத்து, கணிசமான மக்களிடம் இருந்து இருக்கலாம். இதுவும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பிரச்சாரம் செய்யவில்லை
மற்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது. அதாவது மோடி மற்றும் பாஜக தலைவர்களை தவிர்த்துவிட்டு வேலூரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அதுவும் அதிமுகவா, திமுகவா என்ற கேள்வியை தொகுதி மக்களிடையே எழுப்பியதே தவிர, மோடியா, ராகுல் காந்தியா என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை. பாஜக விலகியிருந்தது அதிமுகவுக்கு சாதகமான ஒரு அம்சம் என்கிறார்கள்.
அதிமுக வியூகம்
மேலும் வேலூர் தேர்தலுக்கு அதிமுக தரப்பில் தீவிரமாக களப்பணியாற்றப்பட்டது. முன்கூட்டியே வியூகம் வகுக்கப்பட்டது. அதில் ஒன்று, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சமீபத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முகமது ஜான் ராஜ்யசபா எம்பி ஆக்கப்பட்டார். பல்வேறு சீனியர் தலைவர்கள் போட்டி போட்ட நிலையில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முகமது ஜானுக்கும், சந்திரசேகரனும் ராஜ்யசபா எம்பி வாய்ப்பை வழங்கியது அதிமுக. இவர்கள் இருவருமே வேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு வியூகமாக பார்க்கப்படுகிறது.