உயிரோடுதான் இருக்கிறாரா மதன்? வேகமாகப் பரவும் திடுக் வதந்திகள்!
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்ட நிலையில் அவர் உயிரோடுதான் இருக்கிறாரா? கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எஸ்ஆர்எம் பச்சைமுத்து எனும் பாரிவேந்தரிடம் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக, கங்கை நதியில் மூழ்கி சாகப் போகிறேன் என்று தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார் வேந்தர் மூவீஸ் மதன்.
அவர் தலைமறைவானதிலிருந்து அவர் குறித்து ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை உண்மையா பொய்யா என தெளிவுபடுத்தக் கூட யாருமில்லை.
எஸ்ஆர்எம் பாரிவேந்தரோ, மதனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், மதன் ஒரு மோசடிப் பேர்வழி என்றும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் அவரைத் தேடி வாரணாசி வரை சென்ற தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிலர், போலீஸ் துணையுடன் கங்கை நதியில் படகுகளில் தேடிப் பார்த்தனர். மதன் கிடைக்கவில்லை.
மதனின் தாயார், இரு மனைவியர் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதன் உயிரோடுதான் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவரை பண விவகாரத்தில் கொன்றிருக்கலாம் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் சிலர், டெல்லி வழியாக மதன் வெளிநாட்டுக்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் இன்னும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.