சென்னை குண்டுவெடிப்பு மோடியைக் குறி வைத்து நடத்தப்பட்டதா... பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம்
சென்னை: சென்னைக் குண்டுவெடிப்பு மோடியைக் குறிவைத்து நடத்தப் பட்டிருக்கலாம் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர். மேலும், காயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ''இந்தியாவில் வலுவான பிரதமர் வந்துவிடக்கூடாது என்பது பாகிஸ்தானின் எண்ணமாக உள்ளது.

அந்த வகையில் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் சமீபத்திய பேச்சை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. தமிழகத்திற்குள் நுழைந்துள்ள ஐ.எஸ்.ஐ., உளவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவில்லை என்பதையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சம்பவம் காட்டுகிறது.
மேலும், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி ஆந்திரா வந்துள்ள நிலையில் சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. மோடியைக் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப் பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் பல இடங்களை தகர்க்க உள்ளதாக தெரிவி்த்துள்ளனர். எனவே, ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications