வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் கிரண்குமார்
சென்னை: இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் செயற்கைகோள் கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த செயற்கை கோள் விண்ணில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-எஃப் செயற்கைகோள் கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த செயற்கை கோள் விண்ணில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. மாக்-2, ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 ஏவுகணைகளும் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்படும். சுற்றுச்சூழல் மாசை தடுக்க தூய்மை எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும்.
மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, பாரம்பரிய முறையிலான எரிசக்தி உற்பத்தி போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.