விண்ணில் பாய ரெடியாகும் “பி.எஸ்.எல்.வி சி-27” – இம்மாத இறுதியில் சீறுகிறது!
சென்னை: பி.எஸ்.எல்.வி சி-27 ராக்கெட்டில் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நவீன கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் செலுத்தப்பட தயாராக உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது 4 ஆவது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-டி, பி.எஸ்.எல்.வி. சி 27 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செலுத்த உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் கடந்த 9 ஆம் தேதி மாலை 6.35 மணிக்கு செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் செயற்கைகோளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செயற்கைகோளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ‘'ராக்கெட் ஏவுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட போது ராக்கெட்டின் வெப்ப கவசம் மூடப்பட்ட பின்னர் செயற்கைகோளுடன் இணைந்த ஏவு வாகனத்தில் உள்ள ஒருங்கிணைந்த மின்சார கருவிகளில் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒரு சில தொழில்நுட்ப கருவிகள் ஆய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக தட்பவெப்ப நிலையை கவனித்து அதன் விளைவை தொலைவிடத்துக்கு அனுப்ப பயன்படும் மின்கருவிகள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறகு முழுமையாக சோதனை செய்த பின்னர் இம்மாத இறுதிக்குள் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன''என்று கூறியுள்ளனர்.