செவ்வாயின் நிலவை படம் பிடித்து வந்த மங்கள்யான்!
சென்னை: இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தை சிறப்பாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குப் போய் 20 நாளாகி விட்ட நிலையில் அது தற்போது செவ்வாயின் இரு நிலவுகளில் ஒன்றான போபோஸை படம் பிடித்துக் கொண்டு வந்துள்ளது.
பூமிக்கு ஒரு நிலவுதான். ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகள் உள்ளன. டெய்மோஸ் மற்றும் போபோஸ். இதில் போபோஸ்தான் மிகப் பெரியது.
இதில் போபோஸை தற்போது மங்கள்யான் படம் பிடித்துள்ளது. சிறிய புள்ளி போல அந்த நிலவு மங்கள்யான் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தில் தெரிகிறது.

போபோஸ்
போபோஸ் அதன் சுற்றுப் பாதையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி போகும்போது இந்தப் படத்தை எடுத்துள்ளது மங்கள்யான்.

66,275 கிலோமீட்டர் உயரத்திலிருந்து
செவ்வாய் கிரகத்திலிருந்து கிட்டத்தட்ட 66,275 கிலோமீட்டர் உயரத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்துள்ளது மங்கள்யான்.

இரு நிலவுகள்
செவ்வாயின் இரு நிலவுகளான போபோஸும், டெய்மோஸும், கடந்த 1877ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

ஒரு நாளைக்கு 3 முறை
போபோஸ் செவ்வாய் கிரகத்தை இது ஒரு நாளைக்கு 3 முறை சுற்றி வருகிறது.

நெருங்கி நெருங்கி...!
பூமியின் நிலவான சந்திரன் பூமியை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே. ஆனால் போபோஸ், செவ்வாய் கிரகத்தை நெருங்கி வருகிறது. ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும் 1.8 மீட்டர் என்ற அளவில் அது நெருங்கி வருகிறது.

5 கோடி ஆண்டுகளில் மோதும்
இப்படியே போனால் இன்னும் 5 கோடி ஆண்டுகளில் அது செவ்வாய் கிரகத்தில் போய் மோதி விடும் அல்லது உடைந்து சிதறி சின்னச் சின்ன வளையங்களாக மாறிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications