வரலாற்றில் முதன்முறையாக... ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்கள் - சாதனை படைக்கப் போகும் இஸ்ரோ!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக கிட்டதட்ட 22 செயற்கைகோள்களைச் சுமந்து பி.எஸ்.எல்.வி.சி - 34 ராக்கெட் வருகின்ற மே மாதம் விண்ணில் பாய உள்ளது.
ஒரு ராக்கெட்டுடன் வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம்.
அதிகபட்சமாக கடந்த 2008 ஆம் ஆண்டு பி.எஸ்.எல்.வி 9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து அனுப்பப்பட்டன. இதுவே இஸ்ரோவின் சாதனையாக இருந்தது.

இறுதி கட்டத்தில் இஸ்ரோ:
இந்த சாதனையை தானே முறியடிக்கும் வகையில் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி 34 ராக்கெட்டில் 22 செயற்கைகோள்களை இணைத்து அனுப்ப உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து பணிகளும் வெற்றி அடையும் பட்சத்தில், இந்த ராக்கெட்டு விண்ணில் பாய்வதற்கான கவுண்ட்டவுன் மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணில் பாயும் ராக்கெட்:
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள், "இஸ்ரோ சார்பில் இதுவரை 32 பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 33 ஆவது ராக்கெட்டு அடுத்த மாதம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஜி என்ற ஒரு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது.

சதீஷ்தவானில் இருந்து:
அதன் தொடர்ச்சியாக இந்திய வரலாற்றில் முதன் முறையாக பி.எஸ்.எல்.வி.சி-34வது ராக்கெட் மூலம் 22 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மே மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது.

22 செயற்கைகோள்கள்:
இஸ்ரோவை பொறுத்தவரை நமது நாட்டிற்கு மட்டுமின்றி, வெளிநாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்களையும் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் பணியினை செய்து வருகிறது. அந்த வகையில் பி.எஸ்.எல்.வி. சி 34 ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்படும் 22 செயற்கைகோள்களில் 18 செயற்கைகோள்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்ததாகும். மீதமுள்ள 4 செயற்கைகோள்கள் நமது நாட்டிற்கு சொந்தமானது.

குறைந்த செலவில் வெற்றி:
அமெரிக்கா உள்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகள் நமது இஸ்ரோ மூலம் செயற்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணம் குறைந்த செலவில் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டு வருவது தான்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications