வருமான வரி வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவாரா?
சென்னை: ஏப்ரல் 3ம் தேதி வருமானவரித் துறை வழக்கில் முதல்வர் ஜெயலலிதா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு ஆளும் கட்சி வட்டாரம் முதல் எதிர்க்கட்சிகள் வரை பரவிக்கிடக்கின்றது.
கடந்த 1991 மற்றும் 1992, 1993 ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு விரைவில் வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தங்களுக்கு கால அவகாசம் தரக் கோரி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத எழும்பூர் நீதிமன்றம் வரும் ஏப்ரல் 3ம் தேதி எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் ஏப்ரல் 3ம் தேதி எழும்பூர் நீதி மன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரத்தை திமுக தரப்பு பெரிதுபடுத்தி, அதிமுகவுக்கு பெரிய அளவில் சரிவை உண்டாக்கிவிடும் என்றும், இதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா விலக்கு கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கு விவகாரம் சூடு பிடித்துள்ளது. இதையே தேர்தல் பிரச்சாரமாக கொண்டு செல்ல திமுக தரப்பு தயாராக உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் ஒரு புறம் கிடுக்கிப்பிடி போடுவதும், மறுபுறம் வருமான வரி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதாலும் ஜெயலலிதா மிகவும் சோர்ந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.