ராமமோகன ராவ் விரைவில் கைது.. நாளை முதல் முழு வேகம் எடுக்கிறது வருமான வரித்துறை ரெய்டுகள்!
வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து ராமமோகன ராவ் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படவுள்ளனவாம்.
சென்னை: ராமமோகன ராவைக் கைது செய்வது, அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்துவது என பல்வேறு திட்டங்களுடன் நாளை முதல் படு தீவிரமாக களம் இறங்க தயாராகி வருகிறது வருமானவரித்துறை என்று தகவல்கள் கூறுகின்றன.
நாளை முதல் இந்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் இருக்கும் என்றும், இதற்காகவே ஹைதராபாத்திலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம மோகன ராவ் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளனர்.

டைரிக் குறிப்பு
இதில் ஒரு டைரிதான் முக்கியத் துருப்புச் சீட்டாக மாறியுள்ளது. அதில் தன்னுடன் தொடர்புடைய அனைவர் குறித்தும் எழுதி வைத்துள்ளாராம் ராவ். அதில் பலர் அரசியல் பிரபலங்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஒன்றில் பல முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாம்.

விரிவடையும் விசாரணை
மேலும் சில பென் டிரைவ்களும் சிக்கியுள்ளனவாம். அதிலிருந்து பல்வேறு தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளனவாம். இந்தத் தகவல்களை கோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை முதல் பரபரப்பு ரெய்டுகள்
இதன் அடிப்படையில் நாளை முதல் நடவடிக்கைகளை முடுக்க விடவுள்ளதாம் வருமான வரித்துறை. நாளை முதல் ரெய்டுகள் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஹைதராபாத்திலிருந்து 60 பேர் கொண்ட குழு ஏற்கனவே சென்னைக்கு வந்து விட்டது.

பிரித்து மேயப் போகிறார்கள்
இந்தக் குழுவினருடன், ஏற்கனவே உள்ள பல்வேறு குழுக்களும் இணைந்து நாளை முதல் பிரிந்து பல்வேறு ரெய்டுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. இந்த ரெய்டுகளில் சிக்கப் போவது யார் என்ற பரபரப்பு சென்னையில் நிலவி வருகிறது. இருப்பினும் இப்போதைக்கு அரசியல் பிரமுகர்கள் மீது ரெய்டு வருமா என்று தெரியவில்லை. மாறாக அதிகாரிகள் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்மோகன ராவ் கைது
ரெய்டு நடவடிக்கையுடன் ராமமோகன ராவ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யவும் நடவடிக்கையில் வருமான வரித்துறை இறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் புத்தாண்டு பிறப்பதற்குள் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications