என் வீட்டில் ரெய்டு இல்லை.. எல்லாம் வதந்தி… ஐஏஎஸ் நாகராஜன் மறுப்பு
ஐஏஎஸ் நாகராஜன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்ற செய்தி பொய்யானது என்று ஐஏஸ் அதிகாரி நாகராஜன் மறுத்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சோதனையின் போது, 6 கிலோ தங்கம், 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவணங்கள் பல சிக்கி இருப்பதாகவும் கூறப்பட்டன.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்றும், இந்த தகவல் பொய்யானதும் நாகராஜன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து, தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரது வீட்டிலும் சோதனை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகராஜன் ஐஏஎஸ் வீட்டில் ரெய்டு நடப்பதாக வதந்தி பரவியுள்ளது.