மதிமுக விலகியது பாஜகவிற்கு நல்லதே: எச். ராஜா
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது பா.ஜ.க விற்கு நல்லதுதான் என அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து மதிமுக. தேர்தலில் போட்டியிட்டது.
தேர்தலுக்கு முன் மோடி அலை வீசுகிறது என்றும், மோடி தலைமையிலான ஆட்சி அமையவேண்டும் என்றும் பிரசாரத்தில் முழங்கினார் வைகோ.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே, பா.ஜ.க மற்றும் மதிமுக இடையே இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மோதல் உருவானது.
இது தமிழகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மோடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துவந்தார் வைகோ.
மோடி பற்றிய வைகோவின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து சில தினங்களுக்கு முன் பேசிய பா.ஜ.கவின் தேசிய செயலர் ஹெச். ராஜா " மோடியை வைகோ தொடர்ந்து விமர்சித்துவந்தால் அவர் செல்லும் இடத்திலிருந்து பத்திரமாக திரும்பவர முடியாது" என வெளிப்படையாக எச்சரிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்தார்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மதிமுகவின் முடிவுபற்றி கருத்து கூறியுள்ள ஹெச். ராஜா, மதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கொள்கை ரீதியான முரண்கள் உள்ளது எனவும் வைகோவின் இந்த முடிவு பா.ஜகவிற்கு நல்லதுதான் என்றும் தெரிவித்தார்.
திருமணம் ஒத்துவராவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதான் நல்லது என்று கூறிய ஹெச்.ராஜா, கூட்டணியில் இருந்து கொண்டே பிரதமரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications