எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான எஸ்பிகே செய்யாதுரை வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
அருப்புக்கோட்டை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான எஸ்பிகே நிறுவன உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒரு பக்கம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் அதிமுக தலைகளுக்கு நெருக்கமான வீடுகளில் அதிரடி சோதனைகள் அரங்கேறி வருகின்றன.

வடவள்ளி சந்திரசேகர்
கோவை வடவள்ளி சந்திரசேகர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிக நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவர்தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளர். இவரது மனைவி ஷர்மிளா, கோவை மாநகராட்சியின் 38-வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். ஆலயம் டிரஸ்ட் என்பது வடவள்ளி சந்திரசேகர் நடத்தி வரும் டிரஸ்ட்.

வேலுமணி லிங்க்
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படும் போதெல்லாம் வடவள்ளி சந்திரசேகர் வீட்டையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட்டு வைப்பது இல்லை. இந்த நிலையில் இன்றும் வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தேடுதல் நடத்தினர்.

செய்யாதுரை வீட்டில் ரெய்டு
அதேபோல் இன்னொரு அதிமுக தலையான எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான செய்யாதுரை வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அருப்புக்கோட்டை மதுரை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே நிறுவனத்தையும் செய்யாதுரை நடத்தி வருகிறார். இன்று செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் மீண்டும் ரெய்டு
ஆட்டுத் தோல் வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கி தமிழக அரசின் அசைக்க முடியாத பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக விஸ்வரூபம் எடுத்த செய்யாதுரை வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ174 கோடி பணம் மற்றும் 106 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்திருந்தனர். அத்துடன் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

ரெய்டு எதற்காக?
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ரெய்டு, வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலானதா? அல்லது அதிமுகவை தம் வசமாக்க முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்காக சில பண விநியோகங்களில் செய்யாதுரை ஈடுபட்டதாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையிலானதா? என்கிற விவாதமும் அதிகாரிகளிடையே நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications