சகிப்புத்தன்மை இல்லை...பிடிவாதம்... 6 மாதத்திற்குள் "டைவர்ஸ்".. தடுமாறும் ஐடி ஊழியர்கள்!
சென்னை: சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை இல்லாத காரணங்களால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுபவர்களில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) ஊழியர்கள் அதிகளவில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதியரில் 10 சதவீதம் பேர் 6 மாதங்களுக்குள் விவாகரத்து கோரி விண்ணப்பிப்பதாக நீதித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், குறிப்பாக சென்னையில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனாலேயே மேலும் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்கும் முயற்சியில் நீதித்துறை ஈடுபட்டுள்ளதாம்.
ஐடி ஊழியர்கள்...
இவ்வாறு விவாகரத்து வேண்டி விண்ணப்பித்து இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஐடி ஊழியர்களே அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம் இருபாலரும் கை நிறைய சம்பாரிப்பது தான் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
சுதந்திரம்...
முன்பு போல் வருமானத்திற்கு கணவரின் கைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, தற்போது பெண்களுக்கு இல்லை. அவர்களால் சுயமாக கால்களில் நிற்க முடிகிறது. சுதந்திரமாக தனித்து இயங்க முடிகிறது.
சகிப்புத்தன்மை இல்லை...
இதனாலேயே கணவன், மனைவி இருவருக்குள்ளும் சகிப்புத்தன்மை குறைந்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை காணாமல் போவதாகவும், அதன் காரணமாகவே விரைவாக அவர்கள் விவாகரத்தை நாடுவதாகவும் மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
2வது இடத்தில்...
மேலை நாடுகளில் கல்வி நிலையங்களில் பணி புரிபவர்கள் இரண்டாம் இடத்திலும், போலீஸ் உள்ளிட்ட இதர துறையினர் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தமிழ் நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சாந்தகுமாரி கூறுகிறார்.
அதிகரிக்கும் வழக்குகள்...
மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் செய்யப்பட்டனவாம். ஆனால் தற்போது அது 8 ஆயிரத்தத் தாண்டியுள்ளது.
கவுன்சிலிங் தேவை...
அதிலும், தமிழகத்தில் புதிதாக திருமணம் முடிக்கும் இளம் தம்பதியரில் 10 சதவீதம் பேர் 6 மாதங்களுக்குள்ளாகவே விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களை நாடுகிறார்களாம். இத்தகைய வழக்குகளைக் குறைப்பதற்கு ஒரே தீர்வு, வழக்கு தொடர்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது தான்.
அடுத்தகட்டம்...
கூடவே, திருமணம், குடும்பம் போன்றவற்றின் சிறப்புகள் குறித்து இருபாலருக்கும் திருமணத்திற்கு முன்பாகவே பெற்றோர் கற்றுத் தர வேண்டும். மழலை, பள்ளி, கல்லூரி, வேலை போலவே திருமணம் என்பது வாழ்க்கையின் அடுத்தகட்டம், அதனை வெற்றி கொள்வதில் தான் வாழ்க்கையின் மொத்த வெற்றியுமே அடங்கி இருக்கிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
பெற்றோரின் கடமை...
மற்ற சில நாடுகளைப் போல் திருமணத்தை வெறும் காகிதச் சடங்காகப் பார்க்காமல், புனித சடங்காகப் பார்க்கும் நமது நாட்டில் இவ்வாறு விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவது வேதனையான விசயமே. சிறகுகள் வளர்ந்ததும் தன் குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுத் தரவேண்டிய பெற்றோர் பறவையின் கடமையே என்பது குறிப்பிடத்தக்கது.