ஒரு பக்கம் ராதிகா... மறுபக்கம் சரத்குமார்... வருமான வரி அதிகாரிகள் சரமாரி விசாரணை
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டிற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் இன்று விசாரணை நடத்தினர். நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய அதே நேரத்தில் சரத்குமாரிடம் விசாரணை நடைபெற்றது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பெரும் தொகை ஒன்றை சரத்குமார் வாங்கியதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 7ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வுத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
100 கேள்விகள்
திங்கட்கிழமையன்று காலை 11 மணிக்கு வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிடம், பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் நேற்று சுமார் 100 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்வதற்காக எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன.
ராடான் மீடியா
இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் சரத்குமாரின் மனைவியும்,நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 7ஆம் தேதி கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தி நகரில் உள்ள ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சரத்குமாரிடம் மீண்டும் விசாரணை
அதே நேரத்தில் கொட்டிவாக்கம் வீட்டிற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சரத்குமாரிடம் மீண்டும் கேள்வி எழுப்பினர். ஒரே நேரத்தில் சரத்குமாரின் வீட்டிலும், அவரது மனைவி ராதிகாவின் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரெய்டு தொடருமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக சரத்குமார் வீட்டிலும், ராதிகாவின் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்படுகிறதா? அல்லது வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் ரெய்டு நடைபெறுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. எனினும் வருமான வரித்துறையினரின் ரெய்டு நடவடிக்கை நீடிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கணக்கு வழக்கு சரிபார்க்கிறாங்க
வருமான வரி அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், வருமான வரித்துறை விசாரணை இன்னும் முடியவில்லை என சரத்குமார் பேட்டியளித்துள்ளார். வருமான வரித்துறை கணக்கு வழக்குகளை சரிபார்த்து வருவதாக சரத்கமார் விளக்கமளித்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.