ஐடி அதிகாரிகள் சோதனை என்பது சதி.. அரசியல் காழ்ப்புணர்ச்சி.. நடிகர் சரத்குமார் ஆவேசம்
வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதில் சதி இருக்கிறது என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியே இந்த சோதனைக்கு காரணம் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் பிரச்சாரத்திற்கு தான் செல்லக் கூடாது என்பதற்காகவே வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி , சரத்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 35 இடத்தில் இன்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது: இன்று அதிகாலை 5.45 மணிக்கு வருமான வரித்துறையினர் வீட்டிற்கு வந்தனர். அப்போது கதவு மூடப்பட்டிருந்ததால் கதவை உடைப்பது போன்று தட்டினார்கள். பின்னர் கதவை உடைத்து உள்ளே வரட்டுமா என ஐடி அதிகாரிகள் மிரட்டினார்கள். பின்னர், உள்ளே வந்துவிட்டனர்.

என்ன எடுத்தார்கள்?
அவர்கள் வந்து சோதனை நடத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்களுக்கு இதுவரை ஒத்துழைப்புதான் கொடுத்திருக்கிறோம். அவர்கள் முழுவதுமாக வீட்டை சோதனை செய்தார்கள். ஆனால் எதை பார்க்க அவர்கள் உள்ளே வந்தார்? என்ன எடுத்தார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
ஏனென்றால் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரத்திற்கு செல்லப் போகிறேன் என்று நேற்று நான் சொன்ன உடன் இன்று ரெய்டு நடப்பதைப் பார்க்கும் போது இதில் சதி இருப்பதாக தெரிகிறது. ஓபிஎஸ் அணியினர் போய் ஜி.கே. வாசனை பார்த்தார்கள். அவர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறதா இன்றைக்கு? ஆக இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.

வங்கி லாக்கர் சோதனை
எனது அலுவலகமான ராடனுக்கு வருமானவரித் துறையினர் சென்றார்கள். பின்னர் எனது மனைவியுடன் வங்கிக்கு சென்று லாக்கரையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் சிக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லாவற்றையும் சோதனை செய்து அவர்களே அனைத்தையும் பூட்டி எனது மனைவியிடம் சாவியையும் கொடுத்துவிட்டனர்.

என்னதான் இருந்தது?
எனது வீட்டை சோதனை செய்ததில் வருமானவரித்துறையினருக்கு என்ன கிடைத்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அவர்கள் கைப்பற்றும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. உரிய அளவில் அனுமதிக்கு உட்பட்டு எவ்வளவு பணம் நகை இருக்க வேண்டுமோ அவ்வளவுதான் என் வீட்டில் இருந்துள்ளது. இது எல்லாம் அவர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று சரத்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications