ம்க்கும்... இதெல்லாம் புதுசா என்ன.. அன்புநாதன் தொடங்கி எத்தனை ரெய்டை பார்த்திருக்கோம்!
தமிழகத்தில் ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய ரெய்டுகளின் கதி என்னவென்ற தெரியாத நிலையில் விஷால் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது.
சென்னை: தமிழகத்தில் திடீர் திடீரென வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துவதும் இப்போது ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்துவதும் இது அப்படியே அமுங்கிப் போவதும் நடந்து வருகிற ஒன்றுதான்.. இத்தகைய ரெய்டுகள் ஏவிவிடப்படுவோரின் சில ஆதாயங்களுக்குத்தானே தவிர வேறு எந்த ஒரு விளைவுகளையுமே ஏற்படுத்தியதே இல்லை.
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் ரூ570 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டது. அது தொடர்பான வழக்கு அப்படியே ஊற்றி மூடப்பட்டது.
அதேபோல் கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் ரூ4.77 கோடிதான் கிடைத்தது என கூறப்பட்டது. அன்புநாதனை யாரெல்லாம் பினாமியாக வைத்திருந்தார்கள் என்பது நாடறிந்த உண்மையும் கூட. அதுவும் அம்போவானது.

ரெய்டு கதி என்ன?
அதன் பின்னர் நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் வீட்டில் ஒரு ரெய்டு நடந்தது. அது என்ன ஆனது என்பது யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.

ஒரிஜனல்கள் தப்பினர்
மணல் மாஃபியா சேகர் ரெட்டி, திண்டுக்கல் ரத்னம் உள்ளிட்டோர் அடுத்த ரெய்டுகளில் சிக்கினர். ஆனால் இவர்கள் யாருக்கெல்லாம் பினாமிகளாக இருந்தார்களோ அவர்களெல்லாம் வேண்டியவர்களிடம் சரணாகதி அடைய இப்போது சேகர் ரெட்டி கோஷ்டி நிம்மதியாக இருக்கிறது.

தலைமை செயலகத்தில் ரெய்டு
உச்சகட்டமாக தலைமைச் செயலராக இருந்த ராமமோகன் ராவ் வீடு... ஏன் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களிலும் கூட ரெய்டு நடந்தது.. ஆனால் ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறது நிலவரம்.

நாமக்கல் சுப்பிரமணியன் மர்ம மரணம்
ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. இதில் வாக்காளர்களுக்கு ரு89 கோடி பணம் கொடுக்கப்பட்ட விவரம் சிக்கியது. நாமக்கல் காண்டிராக்டர் சுப்பிரமணியம் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அவர் மர்மமான முறையில் மாண்டு போனார். இதுவும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

மிரட்டலுக்குத்தானா?
இத்தனை ரெய்டுகளிலும் அடுத்த படி எதுவுமே நடக்கவில்லை. இந்த நிலையில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் இன்று நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துக்குள் புகுந்துள்ளனர். மெர்சல் விவகாரத்தில் பாஜக தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த காரணத்துக்காகவே இந்த சோதனை என்பதையும் இது பெரிய விளைவுகளைத் தராத மிரட்டல் என்பதையும் தமிழகம் நன்றாகவே அறியும்!












Click it and Unblock the Notifications