சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள்- ஜெ. தீபா
முதல்வராக சசிகலா தேர்வானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சாடியுள்ளார்.
சென்னை: சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக சாடியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா, தமிழக முதல்வர் பதவியிலும் உட்கார இருப்பதை ஏற்க முடியாத நிலையில் கொந்தளிப்புடன் இருக்கின்றனர் பொதுமக்கள்.
இந்த நிலையில் சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களின் தேர்வாக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என சாடினார்.
தமக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தருகின்றனர்; ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன்; நான் அரசியலில் இறங்குவது உறுதி. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த விளக்கம் போதுமானது அல்ல என்றார் தீபா.