தமிழக அரசுக்கு பாடம் கற்பிப்போம்.... 3வது நாளாக மறியல்- பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஓட்டு கேட்டு வந்தால் நீங்கள் செய்தீர்களா? நீங்கள் செய்தீர்களா? என கேட்போம் எனவும் அரசுக்கு பாடம் கற்பிப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்றும் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31, பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அறிவித்திருந்தது.
அதன்படி, சனிக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் சென்னையில் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பக்தவச்சலம், சி.உதயகுமார், ஆர்.பெருமாள்சாமி, சென்னை மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
சென்னை மட்டுமல்லாது இன்றும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் சாலைமறியலில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.ஆசிரியர்கள் போராட்டத்தால் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இன்னும் சில தினங்களில் செயல்முறை தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகள் முடங்கியுள்ளன. அது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

செய்தீர்களா? செய்தீர்களா?
நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய நிர்வாகிகள், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தன் பங்கேற்பு ஊதியத் திட்டம், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என்று இன்றைய முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டது. முதல்வர் பிரசாரத்தின் போது நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்டுக் கொண்டதன்படி நாங்கள் செய்தோம். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி எங்களுக்கு செய்யவில்லை. வரும் தேர்தலில் அவர் ஓட்டு கேட்டு வந்தால் நீங்கள் செய்தீர்களா? நீங்கள் செய்தீர்களா? என கேட்போம் என்று தெரிவித்துள்ளனர்.

பாடம் புகட்டுவோம்
2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆசிரியர்களின் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் இவர்களுக்கு ஏற்கனவே நாங்கள் பாடம் கற்பித்தோம். இப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அதேபோன்ற பாடம் புகட்ட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எங்களின் ஒற்றுமையை காட்டுவோம் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் கைது
ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக கைது செய்தது போல இன்றும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். எத்தனை முறை கைது செய்து சிறையில் அடைத்தாலும் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆசிரியர்கள்.

பயிற்சி ஆசிரியர்கள்
மூன்றாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பதால் பள்ளிகளை திறந்து செயல்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது மேலும் ஆசிரியர்கள் இல்லாமல் எக்காரணத்தை கொண்டும் பள்ளிகளை மூடக்கூடாது, பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications