தமிழகத்தில் இந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளை சட்ட விரோதமாக கருத முடியும்: ஹைகோர்ட் கிளை தடாலடி
சென்னை: 2018ம் ஆண்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் மதுரையில் 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டவிரோதமாக கருதலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த ஸ்ரீவைகுண்டம், தாடிக்கொம்பு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக, மதுரை ஹைகோர்ட் கிளையில் நடைபெற்ற வழக்கில் இன்று நீதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
2017ல் வெளியிடப்பட்ட அரசாணை, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும் என ஹைகோர்ட் கூறியுள்ளது.

அரசாணை இல்லை
2018ல் அரசாணை வெளியிடாத நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தியதை சட்டவிரோதமாக கருத முடியும் என்றும் உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு மெத்தனமாக இருந்தது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

சட்ட விரோதம்
அரசாணை இல்லாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் என்றும் உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஓராண்டு நிறைவு
ஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டான நிலையில் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதை எழுச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ஹைகோர்ட் மதுரை கிளை கூறியுள்ள கருத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதல்வரே துவக்கி வைத்தார்
கடந்த 14,15 மற்றும் 16ம் தேதிகளில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications