ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தை பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
விலங்குகளை, காட்சிப்படுத்த தடை விதிக்கும் அரசாணையில், சிங்கம், புலி, கரடி, குரங்கு ஆகியவற்றோடு, காளைகளையும் சேர்த்து, மத்திய அரசு, 2011ல் ஒரு அரசாணை வெளியிட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு மே மாதம் தடை விதித்தது.நீதிமன்ற தடையை மறு ஆய்வுக்கு உட்படுத்த, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை, தனித்தனி மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.இந்நிலையில், விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில் இருந்து, காளையை நீக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென் மாவட்ட கிராமங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியைக் குறி வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து வருகின்றன.

களமிறங்கிய அதிமுக
ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் தற்போது அதிமுகவும் களமிறங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளரும், மேயருமான வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு யாகம், கோ பூஜைகளை செய்தனர்.

மோடிக்கு ஜெ. கடிதம்
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று அனைவரும் முனைப்புடன் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை
தமிழக கலாச்சாரத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டுப் போட்டி. பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.

பொங்கல் பண்டிகை
விரைவில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவசர சட்டம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு, மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் தட்பவெப்ப மாற்றங்கள் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் நேரடியாக அறிவுறுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்
விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும்
அல்லது சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்தி சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பிரதிநிதி
வரும் 2016 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வழிவகைக் காணப்பட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் அவர்களது பிரதிநிதியாக நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications