போஸ்டரைத் தொடர்ந்து சசியை நேரில் சந்தித்து நன்றி.. 'அடங்காத' ஜல்லிக்கட்டு பேரவை
ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள் போராடிய நிலையில் சசிகலாவுக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறது ஜல்லிக்கட்டு பேரவை.
சென்னை: பல லட்சக்கணக்கான மக்கள் போராடி பெற்றது ஜல்லிக்கட்டு உரிமை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தவர் அதிமுகவினரின் 'சின்னம்மா' சசிகலாதான் என ஜல்லிக்கட்டு பேரவை அடம்பிடிப்பது மாணவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
வரலாறு காணாத யுகப் புரட்சியை தமிழ் மண்ணில் நிகழ்த்தியது இளைஞர் படை. பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பலநாட்கள் அறவழியில் போராடி ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுத்து சரித்திரம் படைத்துள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் களம் கண்ட மாணவர்களுக்கு உதவி போலீசாரின் நரவேட்டையில் சிக்கி சொல்ல முடியாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர் மீனவ மக்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்ற காரணமாக இருந்த சின்னம்மாவுக்கு நன்றி என போஸ்டர் அடித்தார் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகர்.

ஜல்லிக்கட்டு பேரவையின் இந்த செயல் போராடிய இளைஞர், மாணவர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிலையில் சசிகலாவை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர காரணமாக இருந்ததற்காக நன்றி தெரிவித்திருக்கிறார் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகர்.
ஜல்லிக்கட்டு பேரவையின் தொடரும் இந்த செயல் உயிரைக் கொடுத்து போராடிய தங்களை அவமதிப்பதாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் ஆவேசம் காட்டுகிறது இளைஞர் படை.














Click it and Unblock the Notifications