மெரீனா உள்பட 32 இடங்களில் ஜல்லிக்கட்டு நினைவுத் தூண்... ரூ. 1 கோடி வசூலிக்க இளைஞர்கள் இயக்கம்!
சென்னை ஜல்லிக்கட்டு புரட்சி வெற்றிக்காக தமிழகம் முழுவதும் 32 இடங்களில் நினைவுத்தூண் அமைக்க கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என்று ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த ஓராண்டை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவாளர்கள் மற்றும் அப்துல்கலாம் அறிவியல் ஆலோகசர் பொன்ராஜ் கூறியதாவது : சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுத்தூண் அமைக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஒரு கையெழுத்து ஒரு ரூபாய், ஒரு கோடி ஒரு மாதம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு ஆதரவு நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஜனவரி 20 தொடங்கி பிப்ரவரி 20 வரை தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்கள் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நினைவுத்தூண் அமைக்க அரசை வலியுறுத்துவதோடு, கையெழுத்து இயக்கம் மூலம் பெறும் தொகையானது அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த வருடம் ஜல்லிக்கட்டு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நடந்திருக்கிறது. இது ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் மிகுந்த மனநிறைவைத் தான் தந்திருக்கிறது. சென்னையில் நிறுவனங்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை, இளைஞர்கள் சார்பாக இங்கு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்பது தான் உண்மை, ஆனால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்கள் விருப்பப்படி நடந்தது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. போராட்டம் முடிந்து ஓராண்டான பிறகும் வழக்கு போட்டு இளைஞர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இனியும் இளைஞர்கள் பாதிக்கக் கூடாது என்ற வகையில் அவர்கள் மீது போட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம். போராட்டத்தில் உணர்வுப் பூர்வமாக பேசுவது வழக்கமான ஒன்று தான், இதற்காக இளைஞர்கள் மீது வழக்கு போடக்கூடாது. வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
மாணவர்கள்,இளைஞர்களின் கோரிக்கையே இந்தியா முழுவதும் பீட்டா தடை செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கை. குறைந்தபட்சம் தமிழகத்திலாவது பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் பொன்ராஜ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications