ஜல்லிக்கட்டுக்கு தடை: பாலமேட்டில் கருப்புக் கொடி, கடையடைப்பு- போலீஸ் குவிப்பு
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பூஜை போடப்பட்டன. போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமேட்டில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர். கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தி எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பதை தடுக்க மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், க ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உள்பட அனைவரும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. பாஜக தமிழக தலைவர்கள், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர், இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறி வந்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என ஆதரவுக் குரல்கள் தமிழகம் முழுவதும் வலுத்தது. இது தொடர்பான தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தது.

உச்சநீதிமன்றம் கைவிரிப்பு
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் எனவும், மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பொன். ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பகிரங்க மன்னிப்பு கேட்டார். இதனிடையே தடையை மீறி பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது.

பாலமேடு
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டம் பாலமேட்டில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகளை அடைத்தும், வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றியும் ஜல்லிக்கட்டு தடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காளைகள் ஊர்வலம்
பாலமேட்டில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டும், தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தாமல் தடுக்கும் பொருட்டும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அலங்கரிக்கப்பட்ட காளைகளை ஜல்லிக்கட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாக கொண்டு சென்று பூஜைகள் போட்டுவிட்டு பின்னர் காளைகளை அவிழ்த்து விட்டதால் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications