ஒவ்வொரு நிமிடத்தையும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற செலவிடுகிறோம்: தமிழிசை உருக்கம்
சென்னை: தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு பற்றி, சட்ட ஆலோசனைகள் செய்துகொண்டுள்ளோம். தலைவர்களுடனும் பேசிக்கொண்டுதான் உள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் ஜல்லிக்கட்டை திரும்ப கொண்டுவரும் முயற்சியில் இருந்துவருகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: இந்த பொங்கலை மகிழ்ச்சி பொங்கலை ஆக்குவதற்காகத்தான், ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற ஆணையை மத்திய பிறப்பித்தது. ஆனால், அந்த ஆணையை உச்ச நீதிமன்றம் தட்டிப்பறித்துள்ளது.
எப்படியாவது ஜல்லிக்கட்டு அனுமதியை பெற்றுத்தாருங்கள் என்ற கோரிக்கையுடன், நான், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்ற 6 பேர் குழு நாளை டெல்லி செல்கிறோம். அங்கு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் உள்ளிட்டோரை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறுவது குறித்து ஆலோசிப்போம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை
கடைசி கட்ட முயற்சிகூட பலன் கொடுக்கலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை. தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு பற்றி, சட்ட ஆலோசனைகள் செய்துகொண்டுள்ளோம். தலைவர்களுடனும் பேசிக்கொண்டுதான் உள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் ஜல்லிக்கட்டை திரும்ப கொண்டுவரும் முயற்சியில் இருந்துவருகிறோம்.

அவசர சட்டம்
அவசர சட்டம் மூலமாக ஜல்லிக்கட்டு நடக்க முடியுமா என ஆலோசனை செய்தோம். ஆனால், அட்டார்னி ஜெனரல் அதில் பிரச்சினை இருப்பதாக கூறியதால்தான் முடியவில்லை. அட்டார்னி ஜெனரல் கூறிய எல்லாவற்றையும் வெளிப்படையாக கூற முடியாது என்றபோதிலும், தற்போது அறிவிக்கைக்கு தடை வந்ததைபோலத்தான், அவசர சட்டத்திற்கும் கதி ஏற்படும் என்ற அட்டார்னி ஜெனரல் கருத்தை முழுமையாக புறம்தள்ள முடியவில்லை.

விலங்கு ஆர்வலர்கள்
விலங்கு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டை மட்டுமே எதிர்க்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. பாஜக அரசு, ஜல்லிக்கட்டு அனுமதியை கொடுத்துவிட்டு, பின்வாசலில் பிடுங்கிவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுவது சரியில்லை.

ஒன்றிணைய வேண்டும்
தமிழக அரசியல் கட்சிகள் பாஜக முயற்சியை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டும் நேரம் இது இல்லை. ஜல்லிக்கட்டை கொண்டுவந்துவிட கூடாது என காங்கிரஸ் முயலுவதாக நாங்களும்கூட குற்றம்சாட்டலாம். ஆனால் குற்றம்சாட்டுவதை விடுத்து ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மேனகா கருத்தை ஏற்கவில்லை
பாஜகவின் மேனகா காந்தி ஜல்லிக்கட்டு பற்றி முன்பு ஒருமுறை சொல்லியதையெல்லாம் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி மேனகா காந்தி கூறியதை ஏற்றிருந்தால் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆணையையே பிறப்பித்திருக்க மாட்டோம். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications