உச்சத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் ஆதார், வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்த மக்கள்!
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் அடுத்த கட்டமாக, பல ஆயிரம் மக்கள் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் - இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒருமித்த ஆதரவை அளித்துள்ளனர்.

இன்று மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி நடக்கும் இந்தப் போராட்டத்தில், அடுத்த கட்டமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கிழித்தும் வீசி எறிந்தும் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
'தமிழர் உணர்வை, பண்பாட்டை மதிக்காத மத்திய அரசின் அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை', 'இனி நாங்கள் இந்தியர் இல்லை... தமிழர் மட்டுமே..' என்ற கோஷங்களோடு அந்த அட்டைகளை வீசி எறிந்துவிட்டனர்.
இதுவரை வேறு எந்தப் போராட்டங்களின்போதும் பொதுமக்கள் இப்படி அடையாள அட்டைகளை வீசி எறிந்ததில்லை. இதுபோன்ற உணர்ச்சி மிகுந்த போராட்டத்தைப் பார்ப்பதும் பங்கேற்பதும் இதுவே முதல் முறை என்றனர் வந்திருந்த பலரும்.












Click it and Unblock the Notifications