கட்சிகள் மீது அதிருப்தி.. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நோட்டாவுக்கு ஓட்டு
நோட்டாவுக்கு ஓட்டுபோட முடிவு செய்துள்ளனர் திருப்பரங்குன்றம் தொகுதி ஜல்லிக்கட்டு ஆர்வல மக்கள்.
மதுரை: திருப்பரங்குன்றம் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கடந்த வருடம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை சீராய்வு செய்ய தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனு மீது சில தினங்கள் முன்பு உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட், தடையை நீக்க மறுத்தது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிகளின் தோல்வியாலேயே, ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, அவனியாபுரம் காளை வளர்ப்போர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தங்கள் முடிவை பிறகு மாற்றிக்கொண்ட அவர்கள், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதாக அறிவித்துள்ளனர்.
நோட்டாவுக்கு எத்தனை ஓட்டுக்கள் விழுகின்றன என்பதிலிருந்து ஜல்லிக்கட்டு பிரச்சினையின் வீரியத்தை கட்சிகள் அறிந்து கொள்ளும் என்பது இவர்கள் திட்டமாம்.