கூட்டணி பேச்சுவார்த்தை... மீண்டும் சென்னை வருகிறார் ஜவடேகர்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை தர உள்ளார்.
சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு பெரிய கட்சிகள் எதுவும் முன்வரவில்லை. பாஜகவைப் பொறுத்தவரையில் ஒற்றை நம்பிக்கையாக இருப்பது தேமுதிகதான்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடந்த சனிக்கிழமையன்று பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசியிருந்தார். ஆனால் இச்சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் என சுருக்கி அறிக்கை விட்டது தேமுதிக. இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி என இருக்கிற 'உதிரி'கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்க்கும் வேலையை ஜவடேகர் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வருவதாக கூறியுள்ளார். அதேபோல் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் தமிழகம் வருகை தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமித்ஷா, ஜவடேகர் இருவரும் சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.