லோக்சபா தேர்தல் முடிவுக்கு முன்னறிவிப்பாக ஏற்காடு தேர்தல் அமைய வேண்டும்: ஜெ. வேண்டுகோள்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை நீங்கள் அளித்தீர்கள். உங்களின் அமோக ஆதரவுடனும், எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்; விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம்; முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்; விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம்; தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; கட்டணமில்லா கல்வி; மாணவ-மாணவியருக்கு விலையில்லா புத்தகங்கள்; நோட்டுப் புத்தகங்கள்; சீருடைகள்; காலணிகள்; வண்ணப் பென்சில்கள்; கணித உபகரணப் பெட்டிகள்;
சாதனை பட்டியல்
புவியியல் வரைபடப் புத்தகங்கள்; மடிக்கணினிகள்; சைக்கிள்கள் வழங்கும் திட்டம்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டம்; அரசே மக்களை அணுகும் ‘‘அம்மா திட்டம்;'' ‘‘அம்மா குடிநீர்த் திட்டம்'' என மக்கள் நலன் காக்கும் பல திட்டங்கள் உங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் கட்டமைப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்காடு தொகுதி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஏற்காடு தொகுதி உங்கள் அன்பு சகோதரியான எனது ஆட்சியில் ஏற்றம் பெற்று வருகின்றது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
திமுக டெபாசிட் இழக்கனும்
உங்களின் ஏகோபித்த ஆதரவுடன், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட செ.பெருமாள் இயற்கை எய்தியதையொட்டி, ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் 4-12-2013 அன்று நடைபெறஉள்ளது.
இந்தத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக செ.பெருமாளின் மனைவி பி.சரோஜா நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகம் ஆனவர். பெருமாளைப் போல், அவரது மனைவி சரோஜாவும் அன்புடனும், எளிமையுடனும் பழகும் பண்பாடு உடையவர். உங்களுள் ஒருவராக இருந்து உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வார்.எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனுபவித்த வேதனைகளையும், சீர்தூக்கிப் பார்த்து, 4-12-2013 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் பி.சரோஜாவுக்கு கழகத்தின் வெற்றிச்சின்னமாம் ‘இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றும், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட மற்ற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்றும் ஏற்காடு தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
லோக்சபா வெற்றிக்கு முன் அறிவிப்பு
அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆரின் இயக்கமாம் ‘‘அ.தி.மு.க.'' மகத்தான வெற்றி பெற்று இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய, ஏற்காடு தொகுதியில் நீங்கள் அளிக்க இருக்கும் வெற்றி ஒரு முன் அறிவிப்பாக இருக்க வேண்டும் என்பதே என் அவா.தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், குழப்பமான ஆட்சி முறையாலும், ஊழல் நிறைந்த நிர்வாகத்தாலும் நம் தாய்த் திருநாடாம் இந்திய நாட்டை பெரும் சிக்கலில் தவிக்க விட்டிருக்கும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டு சதி ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு புதியதோர் உலகம் செய்யும் புனிதப்பணி ஏற்காடு இடைத்தேர்தலில் இருந்து தொடங்கட்டும்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ‘இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து அந்தப் பணியைத் தொடங்கி வைத்திடுங்கள் என்று ஏற்காடு தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய என் அன்பு சகோதர, சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications