விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி... ஜெயலலிதா போட்ட முதல் உத்தரவு!
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த இன்னொரு முக்கிய உறுதிமொழியான விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் உத்தரவில் இன்று முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
மீண்டும் முதல்வர் பொறுப்பில் அமர்ந்துள்ள ஜெயலலிதா இன்று முக்கியமான 5 உத்தரவுகளில் முதல் கையெழுத்தைப் போட்டார். அதில் முக்கியமானது விவசாயிகளுக்கானது.
அதாவது, கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் 31-ந் தேதிவரை சிறு, குறு விவசாயிகள் பெற்றிருந்த அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்துப் போட்டுள்ளார்.

இது அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய வாக்குறுதியாகும். அதில், விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலன் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 20,787 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன் 9,164 கோடி ரூபாய் தான் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது இதுதொடர்பான உத்தரவில்தான் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். அதில் இந்த அறிவிப்பால் அரசுக்கு கூடுதலாக ரூ. 5780 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான இந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையிலான உத்தரவில் ஜெயலலிதா முதல் கையெழுத்துப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications