தலைவர்கள் சிலைகளுக்கு ஜெ.வின் "தலைகீழ்" மரியாதை... எம்.ஜி.ஆருக்கு பர்ஸ்ட்.. பெரியாருக்கு லாஸ்ட்!!
சென்னை: தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்க இருப்பதையொட்டி சென்னையில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு தலைகீழாக ஜெயலலிதா மரியாதை செலுத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார். மேலும் முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.

இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் ஆளுநரை ஜெயலலிதா சந்தித்தார். சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக ஆளுநர் ரோசையாவுடன் ஆலோசனை நடத்திய் ஜெயலலிதா தமது அமைச்சரவை சகாக்களின் பட்டியலையும் கொடுத்தார்.
அதன் பின்னர் அவர் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாசாலை வழியே பயணித்தார். அண்ணாசாலையில் தேனாம்பேட்டையை அடுத்து அண்ணா மேம்பாலத்தில் முதலில் பெரியார் சிலை வருகிறது. ஆனால் எடுத்த உடன் பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மரியாதை செலுத்தவில்லை.
பெரியார் சிலையை கடந்து அண்ணாசாலை ஸ்பென்சர் வணிக வளாகம் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பொதுவாக சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு திமுகவினரே மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால் ஜெயலலிதா பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு ஏற்ப ஜெயலலிதாவின் வாகனம் மெரினா கடற்கரை சாலைக்கு சென்று அவரது வீட்டுக்குச் செல்லக் கூடிய ராதாகிருஷ்ணன் சாலையில் பயணித்தது.

பின்னர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு செல்லும் பாதையைக் கடந்து மீண்டும் அண்ணா மேம்பாலத்துக்கே ஜெயலலிதா யூ டர்ன் வந்தார். பின்னர் அங்கே பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி விட்டு நேராக போயஸ் தோட்டம் திரும்பினார் ஜெயலலிதா.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்றுதான் பொதுவாக தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் ஜெயலலிதாவோ தலைகீழாக எம்.ஜி.ஆருக்கு முதலில் மரியாதை செலுத்துவிட்டு பெரியாருக்கு கடைசியாக மரியாதை செலுத்தியிருக்கிறார்.
இதனால் தேவையில்லாமல் மெரினா கடற்கரை சாலையில் பயணித்த பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.












Click it and Unblock the Notifications