ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆகும் ஆசையில்லை... சொல்வது நடிகை ஆர்த்தி
கோவை: ஜெயலலிதாவுக்கு பிரதமராக வர வேண்டும் என்று ஆசை இல்லை. மத்தியில் நமது குரல் ஒலிக்க ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் வக்கீல் நாகராஜனை ஆதரித்து நடிகை ஆர்த்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து 24 மணி நேரமும் ஓயாமல் உறங்காமல் உழைத்து வருகிறார். அவர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அறிவித்த 197 திட்டங்களில் 157 திட்டங்களை கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.
ஊழல் கட்சிகளை விரட்ட
இப்படி அந்த வாய்ப்பு இந்திய மக்களுக்கு கிடைக்கப்போகிறது. இதுவரை நம் நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் செய்து சுரண்டி உலக நாடுகளின் அச்சுறுத்தலுக்கு காரணமாக உள்ளது.
நம் நாட்டையும் நம் நாட்டு மக்களையும் காப்பாற்ற ஊழல் கட்சிகளை ஆட்சியை விட்டு விரட்ட தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா வல்லரசாகும்
ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி பெற்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி உலக நாடுகளிடையே இந்தியா தலை நிமிரும். பொருளாதார வளர்ச்சி, தேசிய நதிகள் இணைப்பு, நாடுமுழுவதும் சீரான மின்சாரம் போன்றவற்றை உருவாக்கி தந்துள்ளார்.
எனவே நம் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற துணிச்சலோடு செயல்படும் முதல்வர் பாரத பிரதமராக வேண்டும் என்றார் ஆர்த்தி.
அவருக்கு ஆசையில்லை
தொடர்ந்து பொள்ளாச்சியில் பேசிய ஆர்த்தி, ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால், ஜெயலலிதாவுக்கு பிரதமராக வர வேண்டும் என்று ஆசை இல்லை. மத்தியில் நமது குரல் ஒலிக்க ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்துவோம் என்றார் ஆர்த்தி.
மக்கள் கூட்டம்
ஆர்த்தி, பிரசாரம் மேற்கொண்ட இடம் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அந்த வழியில் வாகனங்களில் வந்தவர்கள் நகர முடியாமல் அப்படியே நின்று கொண்டனர். மேலும், ஆர்த்தியை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.