முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருது வழங்கி கௌரவித்த ஜெயலலிதா
சென்னை: முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு முதல்வர் ஜெயலலிதா அவ்வையார் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டிலும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவ்வையார் விருது" எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் ‘‘அவ்வையார் விருது'' மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.
முனைவர் சாந்தி ரங்கநாதன், சமூக சேவை நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், குடிபோதை மீள் சிகிச்சை பற்றிய முனைவர் பட்டமும், குடிபோதை மீள் சிகிச்சை ஆலோசகருக்கான உலக அளவில் அங்கீகார சான்றிதழும் பெற்றுள்ளார். இவர் சிறந்த சமூக சேவை புரிந்தமைக்காக 1992ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வியன்னா சிவில் சமூக விருதும் பெற்றுள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கடந்த 33 ஆண்டுகளாக மறுவாழ்வு அளிக்கும் சேவையினை ஆற்றி வருகிறார். அவரது மிகச்சிறந்த சமூக சேவையினை பாராட்டி 2015ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் 6.3.2015 அன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டி.டி. ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், டி.டி.கே. மருத்துவமனை மற்றும் சுவாமி தயானந்தா கல்வி மையம் ஆகியவற்றின் கவுரவ செயலாளர் முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அவ்வையார் விருதினை பெற்றுக்கொண்ட முனைவர் சாந்தி ரங்கநாதன் தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வளர்மதி, வீரமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச்செயலாளர் முனைவர் ராசாராம், மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications