7 பேர் விடுதலை... ஒரே கல்லில் 7 மாங்காய் அடித்த ஜெயலலிதா!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முன்வந்துள்ளதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஒரே கல்லில் 7 மாங்காய் அடித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.
மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

7 பேரையும் விடுவிப்பதாக அறிவித்த ஜெ.
இந்த நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் , இது குறித்து மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும், பதில் வராவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுவிக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.

பலத்த வரவேற்பு... காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த அறிவிப்பு தமிழகத்திலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பை பெற்றது. ஆனால் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஒரே கல்லில் 7 மாங்காய்...
ஆனால் தனது அறிவிப்பின் மூலம் ஒரே கல்லில் 7 மாங்காய்களை முதல்வர் ஜெயலலிதா அடித்திருப்பதாக பேசப்படுகிறது.

முதல் மாங்காய் - முள்ளிவாய்க்கால் முற்ற விவகாரம்
ஈழத் தமிழர்கள் நினைவாக தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்காகல் முற்றத்தை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது ஈழத் தமிழ் ஆர்வலர்கள், அனுதாபிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக அளவிலும் தமிழர்கள் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர். அதை தற்போதைய விடுதலைச் செய்தி மூலம் ஜெயலலிதா ஒன்றுமில்லாமல் போகச் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.

2வது மாங்காய் - காங்கிரஸை தூக்கி அடித்தது
திமுக - காங்கிரஸ் - தேமுதிக ஆகிய கட்சிகள் கொண்ட வலுவான கூட்டணி அமையப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அந்தோணி கூட தமிழகத்திற்கு வரப் போவதாக பேச்சு உள்ளது. ஆனால் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் காங்கிரஸை யாருமே விரும்பாத நிலைக்கு முதல்வர் ஜெயலலிதா தள்ளி விட்டதக கருதப்படுகிறது. அந்த வகையில் தனக்கு எதிராக பிரமாண்டக் கூட்டணி எதுவும் அமைய விடாமல் இந்த நடவடிக்கை மூலம் ஜெயலலிதா தடுத்து விட்டதாக கருதப்படுகிறது.

3வது மாங்காய் - மோடி
அடுத்து மோடியால் ஏற்பட்ட பாதிப்பை தமிழகத்தில் சுத்தமாக இல்லாமல் போகச் செய்து விட்டார் ஜெயலலிதா என்கிறார்கள். திருச்சி மாநாட்டுக்குப் பிறகு ஏதோ பெரும் பலம் பாஜகவுக்கு வந்து விட்டதாக பேசி வருகின்றனர். பாஜகவினர். மே்லும் மோடியை வைத்து தமிழகத்திலும் வலுவான கூட்டணி அமைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஜெயலலிதாவின் விடுதலைச் செய்தி வசீகரித்து விட்டதாக பேச்சு எழுந்துள்ளதால் பாஜகவினரும், மோடி அலையும் இதில் அடிபட்டு விட்டதாக கருதப்படுகிறது.

4வது மாங்காய் - கருணாநிதி, திமுக
திருச்சி திமுக மாநாட்டுக்குப் பிறகு திமுகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். இதனால் திமுக பக்கம் மீடியாக்கள் முதற்கொண்டு அனைவரும் கவனத்தைத் திருப்பியிருந்தனர். இந்த கவனத்தை தற்போது ஜெயலலிதாவின் நடவடிக்கை ஒட்டுமொத்தமாக அவர் பக்கம் திருப்பி விட்டதாக பேசப்படுகிறது. ஏற்கனவே ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் திமுகவும், கருணாநிதியும் அமைதியாக இருந்து விட்டதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போதைய ஜெயலலிதாவின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் ஜெயலலிதா பக்கம் சாய்வார்கள் என்றும் அதிமுகவினர் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

5வது மாங்காய் - தமிழர்களின் தானைத் தலைவி என்ற பட்டம்
இதுவரை உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழர் தலைவராக அறியப்பட்ட ஒரே பெரும் தலைவராக கருணாநிதி மட்டுமே இருந்து வந்தார். அந்த இடத்தை தற்போதைய நடவடிக்கை மூலம் ஜெயலலிதா பிடித்து விட்டதாக ஒரு இமேஜ் கிரியேட் ஆகியுள்ளது. உலகத் தமிழர்கள் மத்தியில் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவுக்கு குவியும் பாராட்டுக்களைப் பார்த்தாலே இது தெரியும். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட தற்போது அம்மா என்று மரியாதையுடன் பேச ஆரம்பித்து விட்டது இன்னொரு சான்று.

6வது மாங்காய் - துணிச்சல் மிக்க தலைவி
தனது அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியாவின் துணிச்சல் மிக்க தலைவர் என்ற பெயரை ஜெயலலிதா மீண்டும் தக்க வைத்துள்ளதாக கருதப்படுகிறது. தற்போது உள்ள இந்திய அரசியல் தலைவர்களிடையே தான்தான் தைரியம் மிக்க அதிரடியான முடிவுகளை சர்வசாதாரணமாக எடுக்கக் கூடிய தலைவி என்பதை இந்த நடவடிக்கை மூலம் ஜெயலலிதா எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அதிமுக தரப்பில் பெருமையுடன் பேசப்படுகிறது.

7வது மாங்காய்- பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்
ஒரு பிரதமராக இருக்க வேண்டியவர் எப்படி தைரியத்துடனும், அதிரடியாகவும், துணிச்சலுடனும், விறுவிறுப்பாகவும் வேண்டும் என்பதையும் தனது முடிவு மூலம் மறைமுகமாக நாட்டு மக்களுக்கு சுட்டிக் காட்டி, தான்தான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்பதை ஜெயலலிதா உணர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications