பரபர போயஸ் தோட்டம்... ஜெ.வுடன் முதல்வர் ஓ.பி.எஸ். உட்பட 19 அமைச்சர்கள் சந்திப்பு!
சென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 19 அமைச்சர்கள் இன்று போயஸ் தோட்டத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வது, எம்.எல்.ஏக்கள் கூட்டம், ஜெயலலிதா பதவியேற்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் நாள்தோறும் போயஸ் தோட்டத்துக்கு சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏராளமான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் போயஸ் தோட்டத்திலேயே காத்து கிடக்கின்றனர்..

ஆனால் எவரையுமே ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்சம் போயஸ் தோட்டத்து பால்கனியில் நின்று தொண்டர்களைப் பார்த்து கை கூட அசைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாலேயே யாரையும் அவர் சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யுமா? அப்படி செய்தால் மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே சென்னையில் இன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் மாலை வரை எந்த கூட்டமும் நடைபெறவில்லை.
இந்த சூழ்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 19 அமைச்சர்கள் இன்று மாலை 3 மணியளவில் போயஸ் தோட்டத்துக்கு அடுத்தடுத்து சென்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களுடன் ஜெயலலிதா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
மேலும் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வது எப்போது? அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை எப்போது நடத்துவது? ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பது எப்போது?என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications