சரத்குமாருக்கு ஒரு சீட்தானாம்.. ஆனால் அது அவருக்கு இல்லையாம்.. நிஜமா??
சென்னை: அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு தேர்தலில் சீட் தரப்படாது என்றும் பிரசார பீரங்கியாக அவரை பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலி்ன்போது ஒருங்கிணைந்த சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 சீட்டுகள் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் ஒரு தொகுதியில் சரத்குமாரும், இன்னொன்றில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வென்றனர். இருவரும் இரட்டை இலையில் போட்டியிட்டனர். தற்போது இக்கட்சி உடைந்து விட்டது.

எர்ணாவூர் நாராயணன் தனிக் கட்சி தொடங்கி முதல் ஆளாக ஜெயலலிதாவைப் பார்த்து கூட்டணியில் சேர்ந்தார். ஆனால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்குப் போனார் சரத்குமார்.
ஆனால் யாரும் எதிர்பாராதா வகையில் அவரை ஜெயலலிதா திடீரென அழைக்க அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் போயஸ் தோட்டத்துக்கு ஓடினார் சரத்குமார். அங்கு ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஜெயலலிதாவைச் சந்தித்தபோது அவருக்கு ஷாக் தரும் செய்தியை ஜெயலலிதா கொடுத்ததாக ஒரு தகவல் உலா வருகிறது.
ஒரு சீட் தருகிறோம். ஆனால் அதில் நீங்கள் போட்டியிடக் கூடாது. நீங்கள் முழுமையாக பிரசாரத்திற்கு மட்டும் போக வேண்டும் என்று போயஸ் கார்டனில் சரத்குமாருக்குக் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி சீட் தரத் திட்டமோ?
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு வேளை தேர்தலுக்குப் பிறகு சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைத் தர ஜெயலலிதா திட்டமிட்டிருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை மேலே சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் யாரை அவர் நிறுத்துவார் என்பது எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது. தனது மனைவி ராதிகாவுக்கு அந்த சீட்டைக் கொடுத்து நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications