ஒரு தரம்.. ரெண்டு தரம்.. மூனு தரம்.. ஜெ.வின் சொத்துக்கள் விரைவில் ஏலம்.. அதிர்ச்சியில் அதிமுக!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 68 சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளன. இதனால் ஜெயலலிதா மீது மிகுந்த பாசம் வைத்துள்ள உண்மையான அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு எந்தக் கட்சியைக் கட்டிக் காத்து வந்தாரோ ஜெயலலிதா, அதே கட்சியால் இன்று அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளன.
ஜெயலலிதா தலைமையில் 2வது முறையாக ஆட்சியமைத்த அதிமுக ஆட்சியின் கீழ் அவரது சொத்துக்கள் ஏலத்திற்கு வருவது ஜெயலலிதா விசுவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

ரூ. 130 கோடி அபராதம்
ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்றவர்களுக்கு தலா 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக சொத்துக்களை பறிமுதல் செய்து அதை ஏலத்திற்குக் கொண்டு வரவுள்ளனர்.

68 சொத்துக்கள்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்குச் சொந்தமான 68 சொத்துக்களை மட்டும் தற்போது ஏலம் விடவுள்ளனர். 68 சொத்துகளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ளன. அந்த 6 மாவட்ட கலெக்டர்களும் அந்த சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

சட்டப்படி கையகப்படுத்தப்படும்
முதலில் இந்த சொத்துக்களை ஆய்வு செய்து பின்னர் அதை அதிகாரிகள் கையகப்படுத்துவார்கள். பிறகு இவற்றைக் கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர். மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சிறப்பு தாசில்தார் அந்தஸ்தில் இருப்பவர் தனி அதிகாரியாக நியமனம் செய்யப்படுவார்.

ஏலம்
இவர்கள் பறிமுதலான சொத்துக்களைப் பராமரித்து வருவர். பிறகு தேவைப்படும்போது ஏலத்திற்கு இதைக் கொண்டு வருவார்கள். மாவட்ட செஷன்ஸ் நீதிபதி மற்றும் கலெக்டர் முன்னிலையில் ஏலம் விடப்படும். ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கு பெற முடியுமாம்

அதிமுகவினர் அதிர்ச்சி
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவை கடுமையாக போராடி கைப்பற்றியவர் ஜெயலலிதா. சசிகலா போல இல்லாமல் நேரடியாக தொண்டர்கள் பலத்துடன் அதிமுகவை தன் வசப்படுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் இன்று அதே அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளது அதிமுகவினரை அதாவது ஜெயலலிதா விசுவாசிகளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அசிங்கப்படுத்திட்டாங்களே
ஜெயலலிதாவால் பல கோடி பல ஆயிரம் கோடி சொத்துக்களைச் சந்தித்தவர்கள் இன்று சந்தோஷமாக, நிம்மதியாக உள்ளனர். ஆனால் அவரது சொத்துக்களை ஏலம் விடப் போகிறார்கள். இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே அம்மாவை என்பதே ஜெயலலிதா விசுவாசிகளின் கோபக் குமுறலாக உள்ளது.












Click it and Unblock the Notifications