ஜெ.,வும் புரட்டாசி ராசியும் : 2014 செப் 27ல் சிறை எண் 7402... இன்று அறை எண் 2008
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை புரட்டாசி மாசம் புரட்டித்தான் போடுகிறது. அதற்குக் காரணம் அவருக்கு இப்போது நடக்கும் தசா புத்திதான் என்கின்றனர் ஜோதிடர்கள். குரு திசை சனி புத்தி நடக்கிறது எனவே உடல் உபாதைகள் அவரை வாட்டி எடுக்கத்தான் செய்யும் என்கின்றனர். இன்று உடல்நலக்குறைவினால் முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அறை எண் 2008ல் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இதே நாளில் பெங்களூருவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறை அறை எண் 7402ல் அடைக்கப்பட்டிருந்தார்.
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியை ஆயுள் உள்ளவரைக்கும் மறக்கமாட்டார் ஜெயலலிதா. அன்றுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி குன்ஹா.

அறை எண் 7402
இரவு 8.30 மணிக்கு ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை அறை எண் 7402க்கு அழைத்துச் சென்றனர். 2014 செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதாவுக்கு மிக சோதனை நாளாக இருந்தது. அன்று புரட்டாசி 2வது சனிக்கிழமை. தமிழகமே பதற்றமடைந்தது. அதிமுகவினர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் விடுதலைக்காக வேண்டிக்கொண்டனர்.

இன்று அறை எண் 2008
கடந்த 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று செப்டம்பர் 27 கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் அறை எண் 2008ல் ஓய்வு எடுத்து வருகிறார். ஜெயலலிதாவிற்கு இதுவரை 18 வகையான மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருக்கிறார். இந்த ஆண்டு புரட்டாசி 2வது சனிக்கிழமை கடந்த இரு தினங்களுக்கு கடந்து சென்று விட்டது. ஆனால் இன்று செப்டம்பர் 27ம் தேதியும் புரட்டாசி 2வது சனிக்கிழமையும் ஜெயலலிதாவிற்கு மறக்கமுடியாத நாட்களாகவே அமைந்துள்ளது.

கோவில்களில் அதிமுகவினர்
இம்முறையும் அதிமுக தொண்டர்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகின்றனர். ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டுதல் வைத்து விளக்கு பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வருகின்றனர். அன்று சிறையில் இருந்து அம்மாவை விடுதலை செய்ய வேண்டிய தொண்டர்கள், இன்று நோயில் இருந்து விடுவிக்க வேண்டிக்கொண்டுள்ளனர்.

எப்போது முகம் காட்டுவார்
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு 20 நாட்கள் கழித்து அக்டோபர் 17ம் தேதி ஜாமீன் வழங்கியது. அக்டோபர் 18ம் தேதி சென்னை திரும்பினார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா எப்போது வெளியே வந்து முகம் காட்டுவார் என்ற கேள்வி ஒவ்வொரு அதிமுக தொண்டருக்குள்ளும் எழுந்துள்ளது. சீக்கிரம் வாங்க அம்மா என்பதே அதிமுகவினரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications