மெரீனாவில் படுத்துறங்கி.. ஜெ. பதவியேற்பைப் பார்த்து மகிழ்ந்து பொட்டியைக் கட்டிய அதிமுகவினர்!
சென்னை: ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண நேற்று சென்னைக்கு வந்து குவிந்து விட்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரீனா கடற்கரையை தற்காலிக இருப்பிடமாக மாற்று நேற்று இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து இன்று காலை ஜெயலலிதா பதவியேற்பை ராட்சத டிவி மூலம் கண்டு களித்து மகிழ்ந்து சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
கிராமங்களில் திருவிழா நடந்தால் குடும்பம் குடும்பாக சாப்பாடு கட்டிக் கொண்டு மாட்டு வண்டிகளில் ஏறி மக்கள் படையெடுப்பார்கள். அதேபோல ஜெயலலிதாவைக் காண நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அதிமுகவினர் பஸ்கள், வேன்கள், கார்களில் சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டனர். இதனால் சென்னையே திமிலோகப்பட்டுப்போனது.

எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் தலையாக காணப்பட்டது. ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து அவர் நேற்று சென்ற பாதையெங்கும் தொண்டர்கள் இரு மருங்கிலும் கடலென திரண்டிருந்தனர்.
சென்னைக்கு நேற்று வந்த பெரும்பாலான வெளியூர்க்காரர்கள் மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை தற்காலிக ஜாகையாக மாற்றி விட்டனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்துத் துங்கிய அவர்கள் காலையில் கடலில் குளியல் போட்டு விட்டு ஜெயலலிதாவைக் காண திரண்டு வந்து விட்டனர். கடற்கரை காமராஜர் சாலை, பதவியேற்பு விழா நடந்த சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் ஆகிய இடங்களில் அவர்கள் குழுமியிருந்தனர்.
பதவியேற்பு விழாவைக் கண்டு களிப்பதற்காக பெரிய பெரிய டிவி திரைகளும் அமைக்கப்பட்டு அதில் பதவியேற்பு விழா ஒளிபரப்பப்பட்டது. 2 பெரிய திரைகளில் பதவியேற்பு விழா ஒளிபரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications