தென்காசியில் புதிய மேம்பாலம் திறப்பு.. ஆனால் வருவாய் அதிகாரிகள் ஆப்சென்ட்
தென்காசி: தென்காசியில் கட்டிமுடிக்கப்பட்டு 3 மாதங்களாக திறக்காமல் இருந்த பாலத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி நேற்று திறந்து வைத்தார்.
ஆனால் இந்த விழாவில், நெடுஞ்சாலைத்துறையினர் மட்டுமே பங்கேற்றனர். மாறாக, மாவட்ட ஆட்சித் தலைவரோ, தென்காசி டிஆர்ஓ, தாசில்தார் என யாருமே வரவில்லை. இதற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. அதை செய்தியின் கடைசிப் பத்தியில் காணலாம்.
தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூபாய் 25 கோடி செலவில் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த பின்னரும் 3மாதங்களாக திறக்காமல் இழுத்தடித்தனர். இதனால் மக்கள் அவதியுற்றனர்.

பொதுநல அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இந்நிலையில் தென்காசி வர்த்தகர்கள் 6ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைதுறையினர் 8ம் தேதி பாலம் திறக்கப்படும் என்ற நிலையில் அது தள்ளிப் போய் ஒருவழியாக நேற்று
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தென்காசி உள்பட பல்வேறு பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
இருப்பினும் முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைப்பதை இங்கே காண்பதற்கு ஏதும் வசதிகள் நெடுஞ்சாலை துறை சார்பில் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வராதது ஏன்...?
பாலம் திறப்பு விழாவின் போது அரசு தரப்பில் நெடுஞ்சாலைத்துறையினர் மட்டுமே பங்கேற்றனர். பாலம் கட்டுவதற்கு நிலம் அளித்த 61 நபர்களுக்கு இன்னமும் அதற்கான நஷ்டஈட்டுத்தொகை வழங்கவில்லை. இதனால் விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர், தென்காசி டிஆர்ஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்க்கவில்லை. அவர்கள் அங்கு வந்து நிற்கும் சமயம் நில உடமைதாரர்கள் வந்து ஏதும் பிரச்சனை செய்துவிடுவார்களோ என்ற நிலையில் வருவாய் துறையினர் யாரும் இந்த விழாவில் பங்கேற்க்காமல் கம்மென்று இருந்து விட்டனராம்.
அடடா.. மக்களைப் பார்த்து அதிகாரிகள் பயப்பட ஆரம்பித்து விட்டார்களே...!












Click it and Unblock the Notifications